மரபணுக்களில் இயற்கைச் சூழல் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறதென்பது மர்மமாகவே உள்ளது.
சமகாலத்தில் ஜீன் (மரபணு) தொழில்நுட்ப ஆய்வுகள் வெகுவாக முன்னேற்றமடைந்து நாளாந்தம் புதிய புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. புதிய ஜீன் சிகிச்சை முறை மூலம், நீரிழிவு, புற்றுநோய், குருதிக் கொதிப்பு போன்ற பல்வேறு கொடிய நோய்களையும் குணப்படுத்துதல் சாத்தியம் என சமீபத்தில் அமெரிக்க தேசிய ஆரோக்கிய மத்தியஸ்தான விஞ்ஞானிகள் ஆய்வு அறிக்கை வெளியிட்டிருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.
இவ்வகை ஆய்வுகள் இன்னும் ஒரு படி மேலே சென்று மனித இனத்தின் குண இயல்புகள் மற்றும் உளவியல் நிலைகளில் கூட சிலவகை ஜீன்கள் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாவரவர்க்கம், பூச்சியினங்களின் இயல்புகள் குறிப்பிட்ட ஜீன்களுடன் தொடர்புபட்டிருப்பதை கிரைகர் மாண்டல், தோமாஸ் ஹன்ட், மோகன் முதலிய ஜீன் தொழில்நுட்ப நிபுணர்கள் எடுத்துக்காட்டியிருந்தனராயினும் 1800 பிற்பகுதியில் சேர் பிரான்சிஸ் கலட்டன் என்னும் ஆய்வாளரே மனிதகுலத்தவரின் குண இயல்புகள் கூட பிறப்பியல் அடிப்படையானவை எனக்கூறியிருந்தார். அவரது கூற்றை அடிப்படையாகக் கொண்டு குடும்ப குண இயல்புகள் பற்றிய ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டன.
ஜீன் தொழில்நுட்ப நிபுணர்கள் தனி நபர்களின் குண இயல்புகளை ஜீன்களுடன் தொடர்புபடுத்துவதை ஆய்வின் கருப்பொருளாக வைத்து ஆய்வுகளை தீவிரப்படுத்தினர். சில குண இயல்புகள் அல்லது கோளாறுகள் (நோய்கள்) ஒரு தனி ஜீனுடன் தொடர்புபட்டிருக்கின்றதென்பதற்கு குருதிச்சோகை, நிறக்குருடு போன்ற நோய்களை உதாரணங்களாக எடுத்துக் கூறலாம்.
மனித பீற்றாகுளோபின் என்னும் புரதத்தில் சங்கேத பாஷைக் குறிப்பாக இருக்கும் (தனி) ஜீனின் கட்டமைப்பில் வேறுபாடு இருப்பதன் விளைவாகவே குருதிச்சோகை நோய் உருவாகிறது. அதேவேளை, ஒப்சின் என்னும் புரதத்தில் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்ட (தனி) ஜீன் இருப்பதாலேயே நிறக்குருடு நோய் உருவாகிறது.
இருப்பினும் இவ்வகை தனி ஜீனால் ஏற்படும் நோய்கள் மிகவும் மட்டானவை. மற்றைய பல நோய்கள் தோன்றுவதற்கு ஒன்று, இரண்டு அல்லது பல ஜீன்கள் தொடர்புபட்டிருக்கின்றன. இதனாலேயே பல ஜீன்களுடன் தொடர்புடைய குண இயல்புகள் ஆய்வாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கின்றது.
மேலும், ஜீன்களின் தொழிற்பாட்டில் இயற்கைச் சூழல் எவ்வகை செல்வாக்குச் செலுத்துகின்றதென்பதும் மர்மமாகவே இருக்கிறது. இருப்பினும் கட்டமைப்பில் வேறுபாடுள்ள ஜீன்கள் பற்றியும், ஜெனோம் வரிசையில் மாற்றங்கள் காணப்படுவது பற்றியும் ஆய்வு அறிக்கைகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இவை பிறப்புடன் அல்ல பரம்பரை நோய்களுடன் அல்லது வயதேறிய பின்பு உருவாகும் கற்றாக்ட், நீரிழிவு, குருதி அமுக்கம் மற்றும் மூப்படைதல் முதலிய நோய்களுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வகை ஆய்வுகள் டி.என்.ஏ. தொழில்நுட்பத்தை வெகுவாக முன்னேற்றமடையச் செய்திருக்கின்றன.
முதலாவது 35,000 எண்ணிக்கையான ஜீன்களைக் கொண்ட ஜெனோமின் சங்கேத பாஷைகளைப் புரிந்து அவற்றை வாசித்தலை சாத்தியமாக்கியிருக்கிறது. இரண்டாவது ரோபோட்டிக்ஸ்ஸை பயன்படுத்தி நுணுக்குக் காட்டி கண்ணாடித் தட்டில் பெருவாரியான ஜீன்களை ஒழுங்காக அடுக்கி வைத்தல் சுலபமாகியிருக்கிறது. இத்துறையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்திவரும் அவிமேற்றிக்ஸ் கம்பனி குறுகிய அல்லது நீளமான டி.என்.ஏ. மூலக் கூறுகளை ஒரு சிறு கண்ணாடித் தட்டில் ஒழுங்காக அடுக்கிவைத்து, 35,000 மனித ஜீன்களில் நோயை உருவாக்குதலுடன் தொடர்புபட்ட ஜீன் எதுவென தெரிவு செய்து கண்டுபிடித்தலை சாத்தியமாக்கியிருக்கிறது.
ஐ.என்.எஸ்.ஜி2, எம்.சி.4ஆர், வெப்டின், குரோமோசோம்3, முதலிய ஜீன்களில் மூலக்கூற்று வரிசையில் குறைபாடு இருப்பதால் மனிதரில் ஊளைச்சதை பிடிக்கும் ஆபத்து உண்டு என கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, இக்கோளாறு பிறவியில் ஏற்பட்டதல்ல வளர்ந்த பின்பு ஏற்படுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இங்கு ஒரு ஜீன் மட்டுமல்ல, பல ஜீன்கள் பங்கேற்கின்றன.
ஒரு தொகுதி அணுசேபதாக்கங்கள், தேக அப்பியாசம், உண்ணும் உணவு வகை, மருந்துவகை பாவனை போன்ற வாழ்க்கை நடைமுறைப் பழக்கவழக்கங்களின் மார்க்கத்தை சரிப்படுத்துவதுடன், நோய்கள் உருவாவதையும் சாத்தியமாக்குகிறது. எங்களில் பலர் பாட்டன் காலத்தில் இருந்ததை விட கூடிய ஊழைச்சதையுடன் இருப்பதையும் அவர்கள் காலத்தில் இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை விட தற்போது அதிகளவு நோயாளிகள் இருப்பதையும் நாங்கள் நன்கு அறிவோம். இவ்வகை கோளாறுகளுடன் தொடர்புபட்ட புதிய ஜீன் கண்டுபிடிப்பு, எங்கள் அனுசேபதாக்கத்தில் எங்கு பிழை நடந்திருக்கிறது என்னும் துப்பை துலக்குவதுடன் அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதையும் தெரிவிக்கும் இந்த ஜீன் ஆய்வுகளால், நாம் பெற்ற அனுபவங்கள் நமக்கு நன்மை பயக்க வேண்டுமாயின், இப்போதிருந்தே நமது மனதைக் கட்டுப்படுத்தி, எமது பழக்க வழக்கங்களை நல் மார்க்கத்தில் திசை திருப்ப வேண்டும்.
இதற்கு உதாரணமாக இளமைத் துஷ்பிரயோகம் ஜீன்களின் தொழிற்பாட்டை எவ்வாறு மாற்றமடையச் செய்கின்றன என்னும் விபரத்தை கிங்ஸ் கல்லூரி லண்டனைச் சேர்ந்த அவ்சலாம்கப்ஸி பிற்றபரோ பல்கலைக்கழக பேராசிரியர் அகமட் ஹறாறி மேரிலாந்தைச் சேர்ந்த அன்ட்றீஸ் மேயர் லன்டன் பேர்க் என்பவர்கள் அண்மையில் கண்டறிந்து தெரிவித்துள்ளார்கள்.
சில குறிப்பிட்ட ஜீன்களின் அளவு, முதலில் மூளையைப் பாதித்து, பின்பு அவரது உள நிலையைப் பாதிக்கிறது. பாதிப்படைந்த நபர்களில் ஜீன்களில் மூலக்கூற்று வரிசையில் மாற்றம், அவரது உணர்ச்சி வெளிப்பாடு, வன்செயல்கள் முதலியவற்றுடன் தொடர்பு பட்டிருப்பதை மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதனது போஷாக்கு பிற்காலத்தில் ஜீன் நடத்தைகளைக் கட்டுப்படுத்துகின்றதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எவ்வகைத் தொழிற்பாடு ஜீனின் தொழிற்பாட்டைச் சுண்டிவிடுகின்றது? என்பது போன்ற வினாக்களுக்கு இன்னமும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த ஆய்வுகள் குடும்ப, சமுதாய நிகழ்வுகள் எவ்வாறு தனிமனித நடத்தையில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை எமக்கு விளக்குகின்றன.
ஜாதி குல பேதங்களும், சிறுவர் துஷ்பிரயோகமும், மனித சமுதாய நீதி நெறிக்கு அப்பாற்பட்டவை மட்டுமல்ல மிகவும் ஆபத்தானதும் கூட என்பதையும் தெரிவிக்கிறது. ஜீன் தொழில்நுட்பம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை எமக்கு எடுத்துக்கூறுகிறது.
- நன்றி THE HINDU-
No comments:
Post a Comment